தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள 6 கட்டிடங்கள் ஆய்வு

டித்வா” புயல் தொடங்கியதைத் தொடர்ந்து, ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொகவந்தலாவ சென்மேரிஸ் கல்லூரியின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள 6 கட்டிடங்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பல மண்டபங்கள் வௌ்ளநீரால் மூழ்கும் அபாயம் இருப்பதாக பாடசாலையின் அதிபர் நோர்வூட் பிரதேச செயலாளருக்குத் தெரிவித்தார், அதனையடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

6 கட்டிடங்களும் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளன, மேலும் பிரிட்வெல் ஓயா, விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவுடன் இணைகின்றது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கெசல்கமுவ ஓயா நிரம்பி வழியும் போதெல்லாம் சென்மேரிஸ் கல்லூரி விளையாட்டு மைதானம் மற்றும் ஆறு கட்டிடங்கள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கும்.

சமீபத்திய மழையின் போது பாடசாலை விளையாட்டு மைதானம் மற்றும் கட்டிடங்கள் வௌ்ளத்தில் மூழ்கியிருந்தன.

கட்டிடங்களை ஆய்வு செய்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள், சில கட்டிடங்களில் இருந்து தண்ணீர் கசிவதைக் கவனித்தனர். மேலும், பாடசாலை கட்டிடங்கள் தொடர்பான அறிக்கை வரும் நாட்களில் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.