-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் (National Institute of Social Development – NISD) சமூக இளமாணிப்பட்டப் பாடநெறிக்காக கடந்த வருடம் விண்ணப்பித்து பணமும் செலுத்தியவர்கள் தற்போது தாம் பரிதாப நிலையில் ஏமாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
சமூக இளமாணிப்பட்டப் பாடநெறிக்காக கடந்த 2024 ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி முன் பதிவுக்காக 10000 பணத்தையும் அதற்குப் பின்னர் 2025.01.28 மாணவர்களை அலுவலக முறையில் பதிவு செய்வதற்கான கடிதம் ஒன்றை வட்ஸ்அப் குழுமத்தில் பதிவிட்டு அதில் கூறப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய தவணைக்கட்டணம் 115000 செலுத்துமாறு கேட்கப்பட்டிருந்தது.
அதன்படி இந்த விண்ணப்பதாரிகள் பதிவுக் கட்டணம் தவணைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ஒரு விண்ணப்பதாரி தலா ஒரு இலட்சத்து 25 ஆயிரம் செலுத்தியுள்ளார். 26 விண்ணப்பதாரிகள் இவ்வாறு பணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், இவ்வாறு சமூக இளமாணிப்பட்டப் பாடநெறிக்காக முறைப்படி விண்ணப்பித்து பணம் செலுத்தி ஒரு வருடம் நெருங்கி இருக்கின்றபோதும் இன்னமும் பாடநெறி தொடங்குவதாக எந்தவொரு அறிவித்தல்களும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் இருந்து கிடைக்கவில்லை என்று விண்ணப்பதாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தாம் ஏமாற்றமடைந்திருப்பதாகத் தெரிவித்து மாணவர்கள் தாம் செலுத்திய பணத்தையாவது மீளளிக்குமாறு கோரி தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்கு வேண்டுகோள் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இது பற்றி பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் மேலும் தெரிவிக்கையில், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நாங்கள் பணம் செலுத்திய பற்றுச்சீட்டு, மற்றுமுள்ள ஆவணங்களை பெற்றுக்கொண்டு அவர்களது நிறுவனத்தின் பணம் செலுத்தியதற்கு ஆதாரமாக பற்றுச்சீட்டினை வழங்கிவிட்டு கற்றல் தொடர்பான விவரங்களை அறிவிக்கிறோம் என்று கூறினார்கள்.
பின்னர் காலம் கடந்து செல்வதனால் நாங்கள் பாடத்திட்ட ஒழுங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டோம். நாளுக்கு நாள் வெவ்வேறான கருத்துக்களை பகிர்ந்தார்கள். சரியான பதில் கிடைக்கப்பெற வில்லை. தமிழ் மொழிக்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவரை நாடினோம் அவரும் இன்னொரு அதிகாரியின் இலக்கத்தைத் தந்தார். அவரிடம் விவரம் கேட்ட பொழுது அவர் இக்கற்கை நெறியைத் தொடர்வதா? அல்லது செலுத்திய கட்டணத்தை மீளளிப்பதா என்று தீர்மானித்து விட்டு சொல்கிறோம் என்றார். இவ்வாறே ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்கள் சொல்லிக்கொண்டே காலம் கழித்து விட்டார்கள்” என்று தெரிவித்தனர்.
இது விடயமாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் நாங்கள் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் லியனகேமுல்லை சீதுவையில் அமைந்திருக்கும் நிறுவனத்தில் சமூக இளமாணி பாடநெறி வெளிவாரி பட்டப்படிப்பிற்கு (Bachelor of Social Work) கடந்த 26.08.2024 அன்று பதிவு செய்திருந்தோம் இந்த பாடநெறி தற்பொழுது உங்கள் நிறுவனத்தினால் தொடங்க முடியாது எனவும், நிர்வாகத்தால் அது இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் உங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், திட்டமிட்டபடி நாங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப்பாடநெறிக்காக நாங்கள் ஒவ்வொருவரும் தலாவே ரூ. 1,25,000 (ஒரு லட்சத்து இருப்பத்தைந்தாயிரம் ரூபாய்) பணத்தை எனவே, பாடநெறி இன்னமும் உங்கள் நிறுவனத்தினால் தொடங்கப்படவில்லை என்பதனால் அந்தப் பாடநெறிக்காக எங்களால் செலுத்தப்பட்ட 125000 தொகையை எனக்கு மீளளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.