இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வருவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வந்து தொழில் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் கோரிக்கை முன்வைத்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று  வியாழக்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதனால் எமது வளங்கள் பாதிக்கப்படுகிறது. அத்துடன் எமது வளங்களை அள்ளி செல்கின்றனர்.

எமது பகுதி மீனவர்களும் இந்திய கடற்பகுதிக்குள் சென்று கடற்றொழிலில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதனையே சொல்கிறார்.

கடந்த காலங்களில் கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணை வழங்க ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடலட்டை பண்ணை போட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான பணம் லாபமாக கிடைத்துள்ளது.

மேலும் பலர் கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர். பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்