வாழைச்சேனையில் மண்ணெண்ணை விநியோகத்தின் போது குழப்ப நிலை

51

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை விநியோகத்தின்போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது.

மண்ணெண்ணை கிடைக்கும் என இன்று  சனிக்கிழமை அதிகாலை முதல் நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் காத்திருந்தனர்.

இதேபோன்று மீனவர்களும் பிரிதொரு வரிசையில் காத்திருந்தனர்.

காலை 9.30 மணியளவில் காத்திருந்த மக்களுக்கு 1 லீற்றர் அளவே வழங்கப்படும் என அறிவித்தல் வழங்கி விநியோகம் செய்ய ஆரம்பிக்கப்பட்ட வேளை காத்திருந்த மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

தங்களது தேவையை பூர்த்தி செய்ய வழங்கப்படும் மண்ணெண்ணையின் அளவு போதாது, 5 லீற்றர் அளவே தேவையென்று தெரிவித்து பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.

இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டு குழப்ப நிலை காணப்பட்டது.

பின்னர் குறித்த விடயத்திற்கு நியாயம் வேண்டி அருகிலுள்ள வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று நிலையப் பொறுப்பதிகாரி வசந்த பண்டாரவிடம் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்தனர்.

நிலைமைகளை கேட்டறிந்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மக்களது கோரிக்கை தொடர்பாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருடன் கலந்துரையாடிய பின்னர் 4 லீற்றர் வழங்குவதற்கு முடிவு காணப்பட்டு வழங்கப்பட்டது.

மீனவர்களுக்கும் 15 லீற்றர் அளவு வழங்கப்பட்டது.

இவ்விடயம் கலவரமாகாமல் தடுத்து சாதுர்யமாக தீர்வு பெற்று தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தமது நன்றியை மக்கள் தெரிவித்தனர்.

Sureshkumar
Srinath