
மூதூரில் பெற்றோர்களால் கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம்
-மூதூர் நிருபர்-
மூதூர் வலயக்கல்வி அலுவலக பிரிவிலுள்ள பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பெற்றோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு மணித்தியாளங்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்தில் 352 மாணவர்கள் கல்வி கற்பதோடு இது க.பொ.த. சாதாரண தரம் வரையான மாணவர்கள் கற்கும் பின் தங்கிய கஷ்டப் பிரதேச பாடசாலையாகும். இப் பாடசாலையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சமயம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதோடு இது தொடர்பாக கிராம மக்கள் அதிகாரிகளிடம் பல்வேறு தடவைகள் கோரிக்கை முன்வைத்த போதிலும் இதுவரை அவை நிறைவேற்றப்படாமையினால் கனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பின்னர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தேவதாஸ் ஜெயந்தன் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது மூதூர் வலயத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்ததோடு இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு குழுவொன்றை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு வருகை தருமாறு தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் பிரதிக் கல்வி பணிப்பாளரிடம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Beta feature
Beta feature