டேன் பிரியசாத் கொலை : தந்தை, மகன் இருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை!

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் இன்று புதன்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்தனர்.

இந்தக் கொலை சம்பவத்தில் பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்சன எனும் தந்தை, மகன் இருவர் மீதும் விசாரணைகளின் போது சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும், அவர்களின் தொலைபேசி அழைப்புக்களைப் பதிவு செய்யவும் உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று, இருவரும் நாட்டைவிட்டு வெளியே செல்வதைத் தடுக்கும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவல உத்தரவிட்டார்.

மேலும், சுட்டுக்கொலை செய்யப்பட்ட டேன் பிரியசாத்தின் சகோதரரான திலின பிரியசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் இன்னும் நீதிமன்றத்தில் குறித்த தந்தை மகனுக்கு எதிராக நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவரை 10 பேரிடம் சாட்சியம் பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடரும் எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நீதவான் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க