ஜனாதிபதி தெரிவிலிருந்து ஒதுங்கி கொள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானம்

-யாழ் நிருபர்-

தமிழரின் நியாயமான அபிலாஷைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்க மறுத்ததால் ஜனாதிபதித் தெரிவிலிருந்து ஒதுங்கி கொள்வதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில்,

அன்புக்குரிய தமிழ்த் தேச மக்களே நாளைய ஜனாதிபதித் தெரிவு தொடர்பாகச் சகல வேட்பாளர்களோடும் தமிழினத்தின் அபிலாஷைகளையும் நலன்களையும் முன்னிறுத்திப் பேச்சுக்களையும் பேரம்பேசல்களையும் மேற்கொண்டோம்.

சஜித் பிரேமதாசா அவர்கள் தமிழரின் இனப்பிரச்சனைக்குத் தீர்வாகப் பஞ்சாயத்து முறையையே பரிசீலிப்பாராம், அவர் தற்பொழுது போட்டியிலிருந்து விலகிவிட்டார் என்பது வேறுவிடயம்.

ரணில் விக்கிரமசிங்க அவர்களும் டளஸ் அளகப்பெரும அவர்களும் ராஜபக்ஷாவினரைப் பாதுகாப்பராம்.

அநுர குமார திஸாநாயக்க அவர்கள் சார்பில் உறுதியற்ற – தெளிவற்ற மழுப்பல் பதில்களே வழங்கப்பட்டன. இவரின் கட்சியே வடக்குக் கிழக்கைப் பிரிக்க முன்னின்றமையும் நினைவில் கொள்ளத்தக்கது

ஆகவே தமிழரின் நியாயமான அபிலாஷைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்க மறுத்ததால் ஜனாதிபதித் தெரிவிலிருந்து ஒதுங்குகின்றோம்.

எமது நிபந்தனைகளை ஏற்கத் தயாரில்லாதவர்களை ஆதரித்து எமது மக்களுக்கும் விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களுக்கும் ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க