இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் துறைமுகத்தில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா மீட்பு

-மன்னார் நிருபர்-

கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று சனிக்கிழமை காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட திடீர் ரோந்து நடவடிக்கையின் போது துறைமுகம் அருகே சந்தேகத்திற்கிடமான கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கஞ்சா மற்றும் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூ.10 லட்சம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.