-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை பல குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகவும் இதனை சுகாதார அமைச்சு உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நேற்று திங்கட்கிழமை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அவர் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் எமது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சிற்கு தெரியப்படுத்தியிருந்தார்.
அதனை முன்னிட்டு அது தொடர்பில் ஆராய இன்று விஜயம் ஒன்றை நாம் மேற்கொண்டு வைத்தியசாலை பணிப்பாளர் இவைத்திய நிபுணர்கள் உட்பட ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுடன் கலந்துரையாடியுள்ளோம் .
சுகாதார ஊழியர்கள் குறைபாடுகள் காரணமாக வைத்திய நிபுணர்கள் தங்கள் கடமைகளை சரியாக மேற்கொள்ள முடியாமையும் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். 100 ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதுடன் தாதியர்களுக்கான பற்றாக்குறையும் கணிசமான அளவு நிலவுகிறது.
இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்து கொடுக்கப்பட வேண்டும் இது போன்று பௌதீக வளங்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது அவசர விபத்து சிகிச்சை பிரிவு இங்கு இல்லை மற்றும் இருதய நோய்க்கான கட்டிடமும் இங்கு இன்மையால் நோயாளிகள் வெளிமாவட்டங்களுக்கு சென்று சிகிச்சை பெறவேண்டியுள்ளது.
சிடி இயந்திரம் செயலிழந்தும் எம்.ஆர்.ஐ போன்ற இயந்திர பற்றாக்குறைமும் நீடிக்கிறது. வைத்தியசாலைக்கான விடுதிகளில் சீராக மின்விசிரி கூட இயங்குவதில்லை எனவும் குடி நீர் கூட பல பற்றாக்குறைபாடுகளுடன் இயங்கி வருகிறது இந்த பிரச்சினைகள் சீர் செய்யப்பட்டு திறம்பட சேவைகளை வழங்க வேண்டும் எதிர் வரும் வாரமளவில் இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் பேசி பிரச்சினைகளை தீர்க்க முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்