சபரகமுவ மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை வெப்பச் சுட்டெண் (Heat Index) கணிசமாக அதிகரிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
போதிய அளவு தண்ணீர் குடிப்பது, வெளிர் நிற ஆடைகளை அணிவது மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வெப்பச் சுட்டெண் என்பது வெறும் காற்றின் வெப்பநிலையை மட்டும் குறிக்காமல், ஈரப்பதத்தையும் கருத்தில் கொண்டு மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையைப் பிரதிபலிக்கிறது என்று திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், முதியவர்கள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய நபர்களைக் கண்காணிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிக வெப்பம் நிலவும் காலங்களில் குழந்தைகளை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் செய்திகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.