இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள், தமது பாதுகாப்பு குறித்து அதிக அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினரால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஹைஃபா, நஹாரியா, அர்கோ, கலிலி, அஃபுலா, கர்மெல் மலைத்தொடர், நாசரேத் மற்றும் திபெரியா உள்ளிட்ட வடக்கு பிராந்திய நகரங்களில் வசிப்பவர்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், லெபனான் எல்லை ஊடாக முன்னெடுக்கப்படக்கூடிய தாக்குதல்கள் மாத்திரமன்றி, நாட்டின் உட்பகுதிகளில் சில குழுக்களினால் முன்னெடுக்கப்படக்கூடிய வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவும் பட்சத்தில், தூதரகத்தினால் வழங்கப்படும் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கையர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
