
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல் : ஒருவர் படுகாயம்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- சீனக்குடா எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் திருகோணமலை சங்கம பகுதியைச் சேர்ந்த ஏ.எச்.முதித கவிஸ்க (24வயது) இளைஞர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
கடந்த இரண்டு நாட்களாக நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று நேற்று பெற்றோல் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்ற போது அவருக்கு முன்னால் இன்னும் ஒருவர் செல்ல முற்பட்ட வேலை இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாக்குவாதம் கைகலப்பாக மாறியதினால் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞரை தாக்கிய சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த கைகலப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.