தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி சடலமாக மீட்பு
-பதுளை நிருபர்-
தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற 17 வயதுடைய இரு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து, இன்று திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவருடன் சென்ற மற்றைய மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு மாணவிகளும் ஒரே பாடசாலையில் படிக்கும் நண்பிகள் என்பது விசாரணகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாணவி நெடுஞ்சாலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அந்த மாணவியை ஏற்றிக்கொண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பொலிஸ் வீதித்தடை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வீட்டில் இருந்து சென்ற இவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.