மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் முற்றாக தீக்கிரை

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் இன்று வெள்ளிக்கிழமை இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

கல்லடி உப்போடையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சி அம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது.

தற்போது தீ அணைக்கப்பட்ட நிலையில் எவருக்கும் காயங்களோ உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை.

பேச்சியம்மன் ஆலயத்தோடு இணைந்ததாக இருந்த தேத்தாமரமும் தீயினால் கருகிய நிலையில் காட்சியளிக்கிறது .

ஆலயம் முற்று முழுதாக தீப்பற்றிய போதிலும் பேச்சியம்மன் சிலை எதுவித பாதிப்புமின்றி காணப்படுகிறது.

இத்தீப்பரவலால் மின் இணைப்பு வயிர்களும் பற்றி எரிந்ததால் ஆலயத்தை சுற்றி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆலயத்தை சுற்றி மறைப்புக்களை ஆலய நிர்வாகத்தினர் ஏற்படுத்தியுள்ளனர்.

இதனைப் பார்வையிட ஆலயத்தை நோக்கிப் பல்லாயிரக்கணக்கான மக்கள் படையெடுத்துள்ளனர். இவர்களை வீடு செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

மேலும் குறித்த பேச்சி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்த தெய்வமாக குறித்த பிரதேச மக்களால் போற்றப்படும் நிலையில் அம்மாளின் சிலை ஆரம்ப காலந்தொட்டு ஓலைக்குடிலில் வைக்கப்பட்டுள்ளமையே சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில் மக்கள் மிகப்பெரிய பேரளிவுக்கான ஆரம்பமே இதுவென அச்சமடைந்துள்ளனர்.