எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவுள்ளதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பண்டாரவளை இந்து கலாசார நிலைய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 நடைபெற்ற இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டதனை அடுத்து தெரிவு செய்யப்பட்ட பதுளை மாவட்ட பெண்களுக்கு கவுரவிப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் உரையாற்றுகையில்,
பதுளை மாவட்டத்தின் சுற்றுலாப் பிரதேசத்தில் தோட்டக் காணிகளை கையகப்படுத்தியதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் காணிகளில் உரிமை வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு பத்து பேர்ச் வழங்கப்பட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதுடன் அவர்களது பாரம்பரிய காணிகளை தோட்ட முதலாளிகளால் சுவீகரிக்க முடியாது.
தற்போதையுள்ள காலகட்டத்தின் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை, இருப்பினும் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் 1700 போதாது 2000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும், என தெரிவித்தார்
மேலும், மகளிர் தின பிரகடனமாக மூன்று விடயங்களையும் முன்வைத்தார்.
2000 ரூபா தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
காணி உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
முதலாளிமார் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் பதிவு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும், என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்