
-யாழ் நிருபர்-
அண்மை காலமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது இலாப நோக்கம் கருதி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொள்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் – சிவன் ஆலயத்திற்கு அருகே பயணித்த அரச பேருந்து பாதுகாப்பற்ற விதத்தில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியவாறு பயணித்த காணொளி வெளியாகி உள்ளது. அந்த பேருந்தில் பயணித்தவர்களில் மாணவர்களும் மிதி பலகையில் நின்றவாறு பயணித்தனர்.
இதன்போது அந்த பேருந்தானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு அருகில் செல்லும் போது, பயணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதுண்டு இறங்குவதை அவதானிக்க முடிந்தது.
எத்தனை உயிர்கள் போன பின்னரும் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் அவர்கள் செயற்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இப்படி பயணிக்கும் தனியார் பேருந்துகள் மீது தனியார் போக்குவரத்து சங்கமோ, அரச பேருந்துகள் மீது அரச போக்குவரத்து சங்கமோ அல்லது அதிகாரிகளோ நடவடிக்கை எடுப்பதில்லையா என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுகின்றது.
எது எவ்வாறாயினும் அண்மை காலமாக பேருந்தில் பயணிக்கும் மக்கள் தமது உயிர்களை கையில் பிடித்தவாறே பயணிக்கின்றனர் என்பது பல சந்தர்ப்பங்களிலும் உறுதியாகி உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
