ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தின் தீர்தோற்சவம்

-வாழைச்சேனை நிருபர்-

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சின்னக்கதிர்காமம் எனச் சிறப்பித்துக் கூறப்படுகின்றதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என முறையாக அமையப் பெற்றதுமான வெருகலம்பதி அருள் மிகு கெஜாவல்லி, மஹாவல்லி சமேத ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தின் தீர்தோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை பக்த அடியவர்களின் அரோகரா கோஷத்துடன் மகாவலி கங்கையின் கிளையாறான வெருகல் கங்ககையில் இடம்பெற்றது.

நாட்டின் பல பாகத்தில் இருந்தும் பக்தர்கள் ஆலயம் வந்து வெருகலம்பதியான் திருவருளை பெற்று தீர்த்தோற்சவத்தில் கலந்து கொண்டனர்.

கடந்த 29.08.2022 ஆம் திகதியன்று ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெற்று தொடர்ந்து 18 தினங்கள் திருவிழா இடம்பெற்று இன்று அதிகாலை தீமிதிப்பு வைபவமும் நடைபெற்று புனித கங்கையில் தீர்த்தோற்சவமும் நடைபெற்றது.

திருவிழாக்கள் யாவும் மரபு வழி கங்காணமும் நிர்வாகமும் மஹோற்சவ பிரதம குரு பிரம்மஸ்ரீ பா.தினேஸ்வர குருக்கள் வாமதேவ சிவச்சாரியார் மற்றும் வெருகலம்பதி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ச.சிவகுமார குருக்கள் ஆகியோரால் நடாத்தப்பட்டது.

இம்முறை அதிகளவான பக்;தர்கள் என்றும் இல்லாதவாறு ஆலயத்திற்கு சமூகமளித்திருந்தனர்.கடந்த 2 வருடகாலமாக நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் தாக்கம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே வழிபாடு நடாத்துவதற்கு சுகாதரா பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

இதேபோல் பாதயாத்திரைகள் மேற்கொள்வதும் சுகாதார பிரிவினரினால் தடை செய்யப்பட்டிருந்தது.இம்முறை அதிகளவான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சிறுவர் முதல் முதியவர் வரை யாத்திரையில் பங்கு கொண்டிருந்தனர்.

 

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த யாத்திரை குழுவினரினால் பாதயாத்திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் சமூக ஆர்வலர்கள் பலர் ஆர்வம் காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.