யாழ்ப்பாணத்தில் வாக்குச்சீட்டை சேதப்படுத்திய இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் வாக்குச்சீட்டை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலத்திற்கு வாக்களிக்கச் சென்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை சேதப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாகக் கிழித்து சேதப்படுத்தியுள்ளார்.

குறித்த நபரிடம் யாழ்ப்பாணம் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இவ்வாறு குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.