ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வை பார்வையிட வந்த பாடசாலை மாணவர்கள்

-மட்டக்களப்பு நிருபர்-

நாட்டின் தலைவர்களாக வரக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவர்களாகிய நீங்கள் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் வழி நடக்கப் பழகுங்கள்’ என ஏறாவூர் நகர சபையின் தலைவர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் 53வது மாதாந்த அமர்வு நகர சபை அலுவலக மண்டபத்தில் கடந்த திங்கள்கிழமை இடம்பெற்றது.

அங்கு மாதாந்த அமர்வைப் பார்வையிட ஏறாவூர் ஸாஹிர் மௌலானா வித்தியாலயம் மற்றும் ஏறாவூர் மிச்நகர் இல்மா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர் கழக மாணவர்கள் வந்திருந்தனர்.

அங்கு சிரேஷ்ட மாணவர் கழக உறுப்பினர்களை விளித்து உரையாற்றும்போது நகர சபைத் தலைவர் நழிம் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நகர சபைத் தலைவர்,

இந்தப் பிரதேசத்திற்கு தலைமை தாங்கக் கூடிய அடுத்த தலைவர்கள் நீங்கள்தான் இங்கிருக்கும் உங்களில் பலர் எதிர்காலத்தில் பல்வேறு துறைசார்ந்தவர்களாக வரக் கூடும், அதிலே பொறியியலாளர்களாக, வைத்தியர்களாக, கணக்காளர்களாக, நகர சபை மாகாண சபை உறுப்பினர்களாக, தவிசாளராக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக நிருவாகத்துறை அதிகாரிகளாக வரக் கூடியவர்கள் உங்களில் பலர் இருக்கலாம்.

அப்படிப்பட்ட தகுதியைக் கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் வழிப்பட்டு நடந்து கல்வியின் உயரிய இலக்கை அடைந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த நாட்டில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் போதை வஸ்துவுக்கோ, அல்லது சமூக விரோதச் செயல்கள் பக்கமோ உங்கள் கவனத்தைத் திருப்பிக் கொள்ளக் கூடாது, அது உங்களையும் இந்த நாட்டையும் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும், என்றார்.