மட்டக்களப்பில் 15 வைத்தியசாலைகளுக்கான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் நிலவுகின்ற வைத்தியசாலை உபகரணங்களின் தேவைப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரனால் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் சபை இணைந்து  3 அரைக் கோடி ரூபா பெறுமதியான வைத்தியசாலைகளுக்கான உபகரணங்களை வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவன தலைவரும் நிறுவன. ஸ்தாபகருமான ரஞ்சன் சிவ. ஞானசுந்தரம் மாவட்ட பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் ஆதார வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகளிடம் கையளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு ஆதார வைத்தியசாலைகளுக்கும் 13 பிரதேச வைத்தியசாலைகளுக்குமான உபகரணங்களும் அதற்குரிய அத்தாட்சி ஆவணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .

வைத்தியசாலைகளுக்கான வைத்திய உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன் , வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவன தலைவரும் நிறுவன. ஸ்தாபகருமான ரஞ்சன் சிவ. ஞானசுந்தரம் , வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவன பணிப்பாளர் எஸ். பிரதாபன் மற்றும் காயிதிரி பிரதாபன் ,கிழக்குமாகாண பிராந்திய முகாமையாளர் கே.தவசீலன் .மட்டக்களப்பு ,அம்பாறை இணைப்பாளர் கே .தர்மராஜா மற்றும்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத்திய அதிகாரிகள், நிர்வாக உத்தியோகத்தர்கள்,பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் ஆதார வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.