
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்புகளில் பலர் கைது
குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடெங்கிலும் உள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, பிராந்திய மட்டத்தில் அனைத்துப் பிரதேச பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகளுக்கு அமைவாக நேற்று வியாழக்கிழமை பொலிஸார் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது 25,170 பேர் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் சந்தேகத்தின் பேரில் 602 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 12 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 263 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 138 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 338 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் மேலும் 83 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் ஏனைய குற்றங்களுக்காக 4,301 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
