புதிய நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட ராமேஸ்வரம் யானை ராமலெட்சுமி

-மன்னார் நிருபர்-

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் வடக்கு கோபுரம் அருகே உள்ள நந்தவனத்தில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் கோவில் யானை ‘ராமலெட்சுமி’ நேற்று செவ்வாய் கிழமை குதுகலமாக ஆட்டம் போட்டது.

திருக்கோவிலில் உள்ள யானைகள் உற்சாகமாக குளித்து மகிழும் வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் நீச்சல் குளம் போன்ற வகையில் கட்டமைப்புகள் கட்டப்பட்டு அதில் யானைகள் குளிக்க வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்ள ராமலெட்சுமி யானைக்காக வடக்கு வாசலில் உள்ள நந்தவனத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கடந்த வருடம் ஜீலை மாதம் நீச்சல் குளம் அமைக்கப்பட்டது.

இதில் நவீன வசதிகளுடன் யானை குளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோடை வெயில் தாக்கத்தால் தவித்த யானையை இந்த நீச்சல் குளத்தில் இறக்கி விட்டு நீராட விட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஆனந்தமாக ஆட்டம் போட்டு குளித்தும் கோடை வெயிலை எதிர்கொண்டு ராமலெட்சுமி யானை ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்