திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக கந்தளாய் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட விளக்கமறியல் கைதி ஒருவர், கழிவறையில் கூர்மையான ஆயுதம் ஒன்றைப் பயன்படுத்தி தனது இரு கைகளிலும் மற்றும் மார்பு பகுதியிலும் கீறி காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கைதி, ஆர்.டி. புஷ்ப குமார (வயது 30) என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கந்தளாய் நீதிமன்ற கழிவறையில் இடம்பெற்றுள்ளதாகவும், ஆரம்ப தகவல்களின் அடிப்படையில் கைதி தானாகவே இந்த காயங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த கைதி உடனடியாக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.