தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர்

9,859

உலக பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமான எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு வேட்பாளராக ட்ரம்ப்பும் களம் காண்கின்றனர்.

இதில் ட்ரம்பை ஜெயிக்க வைக்க எலான் மஸ்க், ட்ரம்பின் பிரச்சாரத்துக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியதோடு மட்டுமல்லாமல், களத்திலும் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.

ட்ரம்புக்கு குறைந்த வாக்கு வங்கி இருக்கும் மாகாணங்களில், வாக்காளர்களை ஒருங்கிணைத்து அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய அரசியல் நடவடிக்கை அமைப்பு [பிஏசி] என்ற ஒன்றை ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க்.

இதன்படி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டிப் படிவங்களில் கையொப்பம் வாங்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

நாடு முழுவதும் இந்த வகையில் 10 இலட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார். முக்கியமாக பென்சில்வேனியாவில் இந்த திட்டம் தீவிரத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் மேற்கூறிய அறிவிப்பை மஸ்க் தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்த படிவத்தில் கையெழுத்திடும் நபர்களில் தேர்தல் நடக்கும் நவம்பர் 5 வரை தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு 1 மில்லியன் டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று மஸ்க் அறிவித்துள்ளார்.

அதன்படி முதல் அதிஷ்டசாலியாக பென்சில்வேனியாவை சேர்ந்த ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

Sureshkumar
Srinath