ஜனாதிபதி ரணில் பௌத்த பேரினவாத சக்திகளுக்கு அஞ்சுகின்றார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

-யாழ் நிருபர்-

மஹிந்த ராஜபக்ஷ பல்வேறுபட்ட சர்வதேச கோரங்களில், நான் 13க்கு அப்பாற் சென்று கொடுப்பேன் என்பதை திரும்ப திரும்ப சொல்லி இருக்கின்றார். பொலிஸ் துறை என்பது ஏற்கனவே 13 திருத்தச் சட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு விடயம். ஆகவே நான் ரணில் ராஜபக்ச இல்லை என சொல்வது அவரது இயலாத் தன்மையை தான் காட்டுகிறது என நேற்றையதினம் புதன் கிழமை ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திர அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் “நீங்கள் ரணில் விக்கிரமசிங்க என்பது எங்களுக்கு தெரியும், 13வது சீர்திருத்தத்தில் என்ன இருக்கிறது என்பதும் எமக்கு தெரியும், பாராளுமன்றத்திற்கு திரும்ப சென்று ஒரு சட்டம் கொண்டுவரத் தேவையில்லை என்பதும் எமக்கு தெரியும் ஆகவே உள்ள 13ஐ நடைமுறைப்படுத்தும்படி நாங்கள் சொல்கிறோம்.

ஆகவே ரணில் விக்கிரமசிங்க இப்படியான கருத்துக்களை சொல்லி, பாராளுமன்றம் செல்ல வேண்டும், ஒப்புதல் எடுக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம், அவர் சிங்கள பௌத்த சிங்கள பேரினவாத சக்திகளுக்கு அச்சப்படுகின்றார் என்பதை தான் காட்டுகிறது.

எங்களைப் பொறுத்த வரை 13ஐ நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச ஒப்புதல் கொடுத்திருக்கின்றார், சஜித் பிரேமதாச ஒப்புதல் கொடுத்திருக்கின்றார், ஜே.வி.பியினர் ஒப்புதல் கொடுத்திருக்கின்றார்கள், இந்த நிலையில் 13வது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நிறைவேற்றுவதற்கு மீண்டும் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று சொல்வதெல்லாம் அர்த்தமற்ற ஒரு கதை. ஆகவே அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆகவே உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண பொலிஸ் முறைமையை நியமித்தால் போதுமானது. சகல மாகாணங்களுக்கும் அந்த மாகாண பொலிஸ் முறைமையை நியமிக்க விருப்பம் இல்லா விட்டால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நீங்கள் கொடுங்கள். அதற்கான ஒரு சட்டத்தை நீங்கள் கொண்டு வாருங்கள். வடக்கு கிழக்குக்கு மாத்திரம் நாங்கள் கொடுக்கின்றோம் என்பதை நீங்கள் செய்யலாம் என்றார்.