
சிகிச்சைக்கு வந்த இருநூறுக்கும் மேற்பட்டோரிடம் அத்துமீறல்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வைத்தியர் ஒருவர், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த இருநூற்றிற்கு மேற்பட்டோரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் – வான்னெஸ் நகரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான வைத்தியர் ஜோயல் லிஸ்கோர்னெக்கடந்த 2017ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் மீது கடந்த 2005 ஆம் ஆண்டும் குழந்தைகள் தொடர்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், குறித்த வைத்தியர் மீது பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் வைத்தியர் ஜோயலிடம் சிகிச்சைக்காகச் சென்றவர்கள் என்றும், அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சமயத்தில் சிறுமிகளாக இருந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வைத்தியர் ஜோயல் இதுவரை 299 பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
குறிப்பாக நோயாளிகள் மயக்க நிலையில் இருக்கும்போது அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக விசாரணையின்போது ஜோயல் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த வைத்தியர் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கு பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.