-அம்பாறை நிருபர்-
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கத்தார் வாழ் கல்முனைக்கான வளைகுடா அமையத்தினால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து ஒரு பகுதியாக நான்கு இலட்சத்து பதின் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள் சம்மேளனத்திடம் நேற்று சனிக்கிழமை கல்முனை பெரிய பள்ளிவாசல் காரியாலயத்தில் வைத்து இவ்வமைப்பினது ஆரம்ப கால உறுப்பினர்கள் மற்றும் தொலைதூர அங்கத்தவர்களினால் கையளிக்கப்பட்டது.
மேலும், இதேவேளை கல்முனை யங் வேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினருடன் சேர்ந்து சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டம் கெலிஓயா பிரதேசத்தினை சுத்தம் செய்வதற்கு தேவையான நிதிப்பங்களிப்பினை செய்தமையும் அதே போன்று கத்தாரில் வசிக்கும் இலங்கை சகோதரர்களின் அமைப்பாக செயற்பட்டுவருகின்ற FSMA – Q அமைப்பினுடைய மனிதாபிமான நீண்டகால திட்டங்களுக்கு உதவ முன்வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், கத்தார் வாழ் கல்முனைக்கான வளைகுடா அமைப்பானது கத்தார் மண்ணில் கடந்த ஒரு தசாப்த காலமாக கடல் கடந்து வாழும் கல்முனை மக்களின் உறவுப்பாலமாக செயற்படுவதுடன் கல்முனை பிரதேசத்தில் பல பொது மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்களினையும் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.