-மன்னார் நிருபர்-
நாட்டில் நேற்று திங்கட்கிழமை ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது நேற்று திங்கட்கிழமை அரச தரப்பு ஆதரவாளர்கள் மேற்கொண்ட கடுமையான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 7 மணி முதல் நாளை புதன்கிழமை காலை 7 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரச, தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை, பாடசாலைகளும் இடம் பெறவில்லை.
இதனால் மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.