இலங்கை வந்துள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளர்

அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளரான அலிஸன் ஹூக்கர் இன்று வியாழக்கிழமை இலங்கை வந்துள்ளார்.

பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தல், பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக துணைச் செயலாளர் ஹூக்கர் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் எமது மக்களின் செழிப்பு ஆகியவற்றிற்கான பரஸ்பர உறுதிப்பாட்டில் வேரூன்றிய ஒரு வலுவான மற்றும் நீடித்த பங்காண்மையினை அமெரிக்காவும் இலங்கையும் பகிர்ந்துகொள்கின்றன.

இராணுவ, வர்த்தக மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பின் ஊடாக, சுதந்திரமான, திறந்த மற்றும் மீண்டெழும் தன்மை கொண்ட ஒரு இந்தோ-பசுபிக் பிராந்தியத்தினை மேம்படுத்துவதற்காக இலங்கையும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுகிறது.

எமது மூலோபாய பங்காண்மையினை நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்பும்போது, டித்வா புயலின் பேரழிவுகரமான தாக்கங்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகளை இலங்கை மக்கள் மேற்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்கா அவர்களுடன் துணை நிற்கிறது.

எமது இரு நாடுகளுக்கும் இருக்கின்ற உடனடி சவால்கள் மற்றும் நீண்டகால வாய்ப்புகள் ஆகிய இரண்டு விடயங்களையும் எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

அமெரிக்க-இலங்கை பங்காண்மைக்கான எமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை இது பிரதிபலிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.