மத்திய வங்கி பிணை முறி சம்பவம் தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் பிணைமுறி சம்பவம் சம்பந்தமான சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டு அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்யுமாறு கோரி ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
நேற்றைய தினம் மேற்படி முறைப்பாடு தொடர்பில் நடைபெற்ற விசாரணையின் போதே கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் ஹர்சன கெக்குணாவலவினால் அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி சம்பவம் தொடர்பாக 500 பில்லியன் ரூபா நிதி வழங்கப்படவேண்டிய நபர்களின் பெயர் பட்டியலை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான உத்தரவை விடுத்துள்ள நீதவான் அதற்காக எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை கால அவகாசத்தை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.