மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்-

இறக்காமம் பிரதேசத்தில் இருந்து 07 சிரேஷ்ட கலைஞர்கள் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட கலைஞர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் தலைமையில் வெள்ளிக் கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கலைஞர் ஓய்வூதியக் கொடுப்பனவானது, சமூக, சமூக நலனோம்பல் அமைச்சின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடனும் சேர்ந்து ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சித்திட்டமாகும்.

நலிவுற்ற நிலையில் இருக்கின்ற கலைஞர்களைப் பேணிக் காத்தல், போசணையளித்தல், பொருளாதார ஆற்றலை வளர்த்தல், அவர்களை கௌரவப்படுத்தல் தேசத்தின் கடமையும் அரசாங்கத்தின் பொறுப்புமாகும்.

இக் கடமைகளையும் பொறுப்புகளையும் செயல்முறையில் நிறைவேற்ற கலைஞர்களின் நலன்கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் கலைஞர்களுக்கு நிரந்தர மாதாந்த ஓய்வூதியம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் (மத்திய) ஏ.எல். நௌபீஸா மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் (மாகாணம்) வசந்தா ரன்சனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.