மீகொடை பொருளாதார மத்திய நிலைய காவலரணின் 5 உத்தியோகத்தர்கள் இடமாற்றம்

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் காவலரண் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், அந்த நிலையத்தில் அமைந்துள்ள காவலரணின் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து உத்தியோகத்தர்கள் இவ்வாறு உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்துக்குள் பிரவேசித்த இருவர் நேற்று திங்கட்கிழமை அதிகாலை அங்குள்ள வர்த்தக நிலையமொன்றில் காசாளராக பணியாற்றிய யுவதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 45,000 ரூபாய் பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தமக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி அங்குள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பொலிஸார் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் மீண்டும் குறித்த வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் செயலாளர் சமிந்த ரோஹன குமார தெரிவித்துள்ளார்.