பௌர்ணமி பொங்கல் நிகழ்வில் நுளைந்த நூற்றுகணக்கான பொலிஸ் விசேட அதிரடி படையினர்

திருகோணமலை தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று தென்னமரவாடி கிராம மக்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வழமை போன்று இன்றைய தினமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இப்பொங்கல் விழாவிற்கு கிராம மக்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் உட்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கிராம மக்களால் பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலய வளாகத்திற்குள் திடீரென நுழைந்த 100க்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் போராட்டங்களை தடுக்கும் ஆயுதங்களுடன் வருகை தந்து அப்பிரதேசத்திலிருந்த கிராம மக்களையும் வெளி பிரதேசத்திலிருந்து வருகை தந்த மக்களையும் விரட்டினர்.

இதன் போது பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட சிவில் செயற்பாட்டாளரான லவகுசராசா மற்றும் அவருடன் வருகை தந்திருந்த செயற்பாட்டாளர்களுக்கும் நீதிமன்ற தடையுத்தரவினை வழங்கி அவ்விடத்திலிருந்து வெளியேற்றியிருந்ததுடன் பொங்கலை தடுத்து நிறுத்தி அக்கிராம மக்களையும் வெளியேற்றியுள்ளனர்.

இச்சம்பவம் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தினுடைய கலாசார மற்றும் மத வழிபாட்டு உரிமையினை மீறும் செயலாகும். ஆகவே இச்சம்பவத்தை கிராம மக்களும் சிவில் சமுகங்களும் கண்டிப்பதுடன் இதற்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்