பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான காரியாலய சீருடைகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்-

இறக்காமம் பிரதேச செயலகத்தின் சேவைகளை வினைத்திறனாகவும், இலகுவாகவும் மக்களுக்கு வழங்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பொதுமக்கள் தினமான திங்கள் கிழமைகளில் காரியாலயத்திற்கு வரும் சேவைநாடிகள் இலகுவில் காரியால உத்தியோகத்தர்களை அடையாளம் காணக்கூடிய வகையில் பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் அனைத்து ஆண் உத்தியோகத்தர்களுக்குமான காரியாலய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உற்பத்திதிறன் பிரிவுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பிராஸ் இம்தியாஸ், ஏ.எம். பாஷி மற்றும் ஏ.எல்.ஜஸீர் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற மேற்படி சீருடைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் இன்று புதன் கிழமை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீல் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்களும் ஏனைய காரியாலய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.