பாயிஷா மகா வித்தியாலயத்திற்கு 2.5 மில்லியன் நிதி உதவி

 

மாணவர்களையும் இளைஞர்களையும் அறிவியல் ஆக்கம் கொண்டவர்களாக, புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குபவர்களாக, புதிய தொழில் முயற்சிகளை தொடங்குபவர்களாக, ஒன்றிணைந்து இயங்குபவர்களாக, மாற்றவேண்டும் என்ற கருத்துக்களை விதைப்பதோடு அதற்கான உதவிகளையும் கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானி எஸ்.எம். சபீஸ் செய்து வருகின்றார்

மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை எங்கும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இணைப்பாடவிதான செயற்பாடுகளை பாடசாலையில் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். பெயர் பெற்ற சர்வதேசப் பாடசாலைகள் இணைப்பாட செயற்பாடுகளுக்கே அதிகம் முக்கியத்துவம் அளித்து பாடசாலையின் பெயரை தேசிய மட்டம் மற்றும் சர்வதேச மட்டம் வரை தக்கவைத்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில் இம்முறை க.பொ.த சா தரப் பரீட்சை பெறுபேறுகளில் மிகச் சிறந்த பெறுபேறினைப் பெற்ற அக்/பாயிஷா மகா வித்தியாலயத்தில் இணைப்பாட செயற்பாடுகளை ஊக்கப் படுத்தும் முகமாக சர்வதேச பாடசாலைகளில் உள்ள டேபில் டெனிஸ் உள்ளக அரங்கினை ஒத்த ஓர் அரங்கினை தனது குடும்பத்தாரின் உதவியோடு இணைந்து 2.5 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கு கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸ் முன்வந்துள்ளார்

அதன் முதல் கட்ட சந்திப்பு நேற்று வியாழக்கிழமை அக்/பாயிஷா பாடசாலையின் அதிபர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் போன்றவர்களுடன் இடம்பெற்றது.