பல்கலைக்கழக விடுதிக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவன் ஒருவர், பல்கலைக்கழக விடுதிக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல்- மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 25 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு பரீட்சைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், குறித்த மாணவன் இதுவரை நடைபெற்ற அனைத்து பரீட்சைகளிலும் தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறதிப் பரீட்சைக்கு குறித்த மாணவன் சமூகமளிக்காமையால் அவரது நண்பர்கள் அவரை தேடியுள்ளதுடன், அவரது கைப்பேசியும் செயலிழந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாணவனைத் தேடி, அவரது நண்பர்கள் விடுதிக்குச் சென்ற போது, அங்கு மாணவன் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதை கண்டுள்ளனர்.

பின்னர், அவரது அறையிலுள்ள மேஜை மீது, உயிரிழந்த மாணவனால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்துள்ளதுடன், அதில் “ தனது இறப்புக்கு தானே காரணம் என்றும் தன்னை மன்னியுங்கள். இந்த அழுத்தத்தை தன்னால்  தாங்கிக்கொள்ள முடியவில்லை” என எழுதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.