நிதியமைச்சர் அலி சப்ரி- IMF பணிப்பாளர் சந்திப்பு

நிதியமைச்சர் அலி சப்ரி, வோஷிங்டனில் உள்ள IMF தலைமையகத்தின் IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை சந்தித்தார். ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற IMF சாதகமாக உள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலைமையைத் தணிக்க நிதியமைச்சர் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளை IMF பாராட்டியதாகவம் அறியமுடிகிறது. மேலும், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய கலந்துரையாடல்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவிருந்த குறித்த கலந்துரையாடலுக்காக நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் (17) வோஷிங்டன் நோக்கி பயணமாகி இருந்தனர்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு பயணமாகினர். இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஆரம்பமானது.

இதில் சர்வதேச நாணய நிதியம், 3 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க முன்னராக நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற IMF சாதகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.