தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் செயலமர்வு

 

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் வழிகாட்டலின்கீழ் பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா மற்றும் தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பி. எம். இர்ஷாட் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று இரு அமர்வுகளாக செயலமர்வுகள் இடம்பெற்றது.

குறித்த அமர்வுகளில் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்துகொண்டு செயலமர்வின் நோக்கங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

முதலாவது அமர்வு பல்கலைக்கழக கல்விசார் அணியினர் மற்றும் உயர்கல்வியை தொடரவிரும்பும் இறுதியாண்டு மாணவர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இந்நிகழ்வு தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இரண்டாவது அமர்வு உபவேந்தரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உபவேந்தர், பீடாதிபதிகள், நூலகர், பதில் பதிவாளர், பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர், தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளர் உள்ளிட்டவர்களுடன் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு இரு நாடுகளுக்குமிடையேயான பரிமாற்றங்கள், கல்விப் பங்காண்மைகள் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றை வளர்க்கும் ஒரு புதிய சகாப்தத்திற்குள் ஆணைக்குழு பிரவேசித்து செயட்ப்படுகின்றது .

எல்லைகளுக்கு அப்பால் சென்று அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான கல்விச் சூழலை மேம்படுத்தும் துடிப்பான அறிவுப் பரிமாற்றங்கள் ஊடாக, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே காணப்படும் மக்களுக்கிடையிலான, கல்வி மற்றும் அறிவியல் உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் ஆணைக்குழு ஒரு முக்கிய பங்கை வகித்து செயட்ப்படுகின்றது.

“ஃபுல்பிரைட் நிகழ்ச்சித்திட்டம் 71 ஆண்டுகளாக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை கட்டமைத்து இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது. 2000 இற்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பயணம் செய்து; நிகழ்ச்சித்திட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றுள்ளனர்.