சாம்பார் கொடுக்காததால் ஊழியர் அடித்துக் கொலை

ஹோட்டல் ஒன்றில் கூடுதலாக சாம்பார் கேட்போது கொடுக்காத ஊழியர் ஒருவர் அடித்துகொலை செய்யப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவில் தமிழ்நாடு-சென்னையில் இடம்பெற்றுள்ளது.

சென்னை, பல்லாவரம் அருகே பம்மலில் இயங்கிவரும் ஹோட்டல் ஒன்றில் தஞ்சாவூரை சேர்ந்த அருண்(30) என்பவர் பணியில் இருந்துவந்தார்.

இந்நிலையில்  உணவகத்திற்கு அனகாபுத்தூரைச் சேர்ந்த சங்கர் (55), அவரது மகன் அருண்குமார்(30) ஆகிய இருவரும் சாப்பாடு பார்சல் வாங்க வந்துள்ளனர்.

அப்போது,  அவர்களுக்கான பார்சல் கட்டி கொடுக்கப்பட்டபோது  தங்களுக்கு கூடுதலாக சாம்பார் பாக்கெட் ஒன்று வேண்டும் என்று தந்தை, மகன் இருவரும் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால்  அருண் கொடுக்க மறுத்துள்ளார்.

உடனே  தந்தை சங்கரும், மகன் அருண்குமாரும் அருணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இருவரும் அருணை தாக்கியுள்ளனர்.

சரிந்து விழுந்த ஊழியரை சக ஊழியர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தந்தை,  மகன் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.