சட்டத்தை அவமதித்த குற்றச்சாட்டில் மருதமுனையில் நால்வருக்கு அழைப்பானை

-கல்முனை நிருபர்-

சட்டத்துறைக்கு   முகநூல் ஊடாக பங்கம் விளைவித்த  மருதமுனை நால்வருக்கு கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்துறையையும் சட்டத்தரணிகளின் தொழில் தர்மத்தையும் அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல முகநூல் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் இட்டுவந்த நபர்களுக்கெதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி எஸ்.எச்.எம். மனார்த்தீனினால் தாக்கல் செய்யப்பட்ட MC/KAL/PVT/688/2022 இலக்க வழக்கானது இன்று ஆதரிப்புக்காக எடுக்கப்பட்டபோது,  முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் ஆஜரான சட்டத்தரணிகள் மேற்கொண்ட சமர்ப்பணத்தில் திருப்தியுற்ற கௌரவ நீதிவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கில் எதிரி/பிரதிவாதிகளாக மருதமுனையைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முபாறக், இப்றாலெப்பை முகம்மது றியாஸ், சேகு இஸ்மாயில் மௌஜூத், அஸான் மனாஸ் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.