எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறியை வழிமறித்து ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்-

சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றமான நிலை உருவானது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கொட்டகலை பிரதேச மக்கள், அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டதுடன், கேஸ் சிலிண்டர்களை வீதியில் வைத்து, எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என உரத்துக் குரல் எழுப்பினர்.

அத்துடன், நுவரெலியா பகுதிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச் சென்ற லொறியையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்தனர்.

இதனையடுத்து திம்புள்ள – பத்தனை பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, கேஸ் லொறியில் இருந்த கேஸ் சிலிண்டர்களில் 60 கேஸ் சிலிண்டர்களை மாத்திரம் இறக்கி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு வழங்கினர்.

சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் நுவரெலியா – ஹட்டன் வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதேபோல் மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகைத் தந்த வாகன சாரதிகளும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.