உத்தேச வரைவு சட்டம் குறித்து அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான கலந்துரையாடல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

அடுத்து கொண்டு வரப்படவிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்தலும் மேற்பார்வை செய்தலும் உத்தேச வரைவுச் சட்டம் குறித்து சிவில் சமூக அமைப்புக்கள் – அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பு பிராந்திய மட்டங்களில் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.

இது விடயமாக கிழக்கு மாகாணத்திற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மியானி வள நிலயத்தில் இடம்பெற்றது.

மனித எழுச்சி நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் செயலமர்வில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் செயற்பட்டு வரும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சிவில் சமூக அமைப்புக்கள் – அரச சார்பற்ற நிறுவனங்கள் தேசிய கூட்டமைப்பின் இணைப்புக்குழு உறுப்பினர்களான ஏ. சொர்ணலிங்கம், பீ.கெளதமன், றுக்கி பெர்னான்டோ, கே. நிஹால் அஹமட் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு செயலமர்வை நெறிப்படுத்தினர்.

தற்போது கொண்டு வரப்படவிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்தலும் மேற்பார்வை செய்தலும் உத்தேச வரைவுச் சட்டச் சட்டகம் (Legal Framework) பல்வேறுவகைப்பட்ட சிவில் சமூக அமைப்புக்களை ஒரே சட்டத்தினுள் உள்ளடக்கி பதிவு செய்து கொள்வதற்கு வற்புறுத்துவதாக கலந்துகொண்ட சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

சிவில் சமூகத்துக்காக இலங்கை அரசியலமைப்பில் பொதிந்துள்ள அடிப்படை உரிமைச் சுதந்திரங்களை, தற்போது கொண்டு வர உத்தேசித்திருக்கின்ற புதிய சட்ட வரைவு மறுதலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உத்தேச வரைவுச் சட்டத்தின் ஏற்புடைமை ஜனநாயகத்திற்கு விரோதமானதாகக் காணப்படுவதோடு ஏதோவொரு வகையில் அரசியல் அழுத்தத்தைப் பிரயோகித்து அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்படவேண்டும் என்பது போன்ற மறைமுக அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இது விடயமாக சிவில் சமூக அமைப்புக்கள் – அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உத்தேச வரைவுச் சட்டத்தை முன்னிலைப்படுத்திக்கூறி பின்னூட்டல்களை வழங்குவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையோருக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பழிவாங்கல்களின் பரந்துபட்ட அரசியல் – சட்ட சூழமைவைக் கருத்திற்கொண்டு நாம் செயற்படுகின்றோம்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் போன்ற ஜனநாயகமற்ற சட்டம் உருவாக்கும் செயன்முறைகளைத் தவிர்த்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நாம் வலியுறுத்தி வருகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சமூக அமைப்புக்களின் சார்பில் மைத்திரி ராஜசிங்கம், பிலிப் திஸ்ஸானாயக்க, ரோஹன ஹெட்டியாராச்சி மற்றும் என். ஹர்ஷா ஜயரத்ன ஆகியோர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.