
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் மோசடியான ‘கிரிப்டோ’ பண வணிகம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த மோசடி விளம்பரங்கள் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லிதுவேனியாவிலிருந்து இயங்கும் இந்த மோசடி கணக்குகள் மூலம், இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களை இலக்காகக் கொண்டு மோசடியான விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரச அதிகாரிகள் மற்றும் பிரபலமானவர்களின் அங்கீகாரம் உள்ளதாக பொய்யாகக் கூறும், கிரிப்டோ பண முதலீடுகளை விளம்பரப்படுத்தும் ஒன்லைன் விளம்பரங்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.