இலங்கை கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளைஞன்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஷாருஜன் சண்முகநாதன் இதில் இடம்பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சினெத் ஜெயவர்தன தலைமையிலான குறித்த குழாமில் புலிண்டு பெரேரா, ஹிருன் கபுருபண்டார, ரவிஜான் நெத்சர, ருசன்ட கமகே, ஷாருஜன் சண்முகநாதன், டினுர கலுபஹன, மல்சா திருப்பதி, விஷ்வா லஹிரு, கருக சக்கெத், டுவின்டு ரத்நாயக்க, ருவிஷான் பெரேரா, சுபுன் வடுகே, விஹாஸ் தெவ்மிக மற்றும் விஷேன் ஹலம்பகே ஆகிய வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு – கொட்டாஞ்சேனை, புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் மாணவனாவான் சாருஜன் சண்முகநாதன் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாமில் முதல் தடவையாக கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவை முன்னுதாரணமாக கொண்டுள்ள சாருஜன், அவரைப் போலவே விக்கெட் காப்பு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டையும் திறம்பட செய்து 2022 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான விருது வழங்கும் விழாவில் சிறந்த விக்கட் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 2015 ஆம் ஆண்டு பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் டொனி கிரேவினால் ”லிட்டில் சங்கா” என சாருஜன் சண்முகநாதன் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.