இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற மூவர் கைது

-மன்னார் நிருபர்-

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த நிலையில் கடல் அட்டையுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவதாக சுங்கத் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் கோகுல், சத்தியநாராயணன் உட்பட சுங்கத்துறை அதிகாரிகள் கடற்கரை பகுதிக்கு சென்ற பொழுது படகில் கடல் அட்டை மூடை ஏற்றிக் கொண்டிருந்த போது குறித்த படகை கைப்பற்றினர்.

இதன் போது குறித்த படகிலிருந்த கடல் அட்டைகளையும் கடத்த முயன்ற தேவிபட்டிணத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சுங்கத்துறை அலுவலகத்தில் தடுத்து வைத்து நடத்திய விசாரணையில் கடல்வழியாக படகு மூலம் இலங்கைக்கு 700 கிலோ கடல் அட்டைகளை கடத்த இருந்தமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரியிடம் பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளையும் படகையும் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் ஒப்படைத்தனர்.

மேலதிக விசாரணைகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்