அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தும் அமைச்சர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல இன்று காலை 8.30 மணியளவில் நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு முன்பாக ஆரம்பமானது.

நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்ன தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன் கலபட உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருனாரத்ன தேசிய கொடியை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

ஒவ்வொருவருடமும் வசந்த கால நிகழ்வுகள் பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய அணிவகுப்புகளுடன் ஆரம்பமாவதைப் போன்றே இந்த வருட நிகழ்வுகளும் ஆரம்பமாகியது.

இதே வேளை நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா தனியார் போக்குவரத்து சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தங்களுக்கு எரிபொருட்கள் கிடைக்கவில்லை எனவும் இ.போ.ச பேருந்துகளுக்கு மாத்திரம் எரி பொருட்கள் வழங்கப்படுவதை ஆட்சேபனை செய்துமே தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கின்ற இந்த நிலைமையில் வசந்த கால நிகழ்வுகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடனும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று கோசமிட்டவாறு வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்ற இடத்தை முற்றுகையிட்டனர் .

இதன் காரணமாக வசந்த கால ஆரம்ப நிகழ்வுளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலைமை காரணமாக நிகழ்வுகள் அனைத்தும் இடைநடுவில் நிறுத்தப்பட்டதுடன் அங்கு குழப்பமான ஒரு நிலைமை ஏற்பட்டது.

இதன்போது பாதுகாப்பில் ஈடபட்டிருந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன் அனைத்து நிகழ்வுகளையும் நிறைவிற்கு கொண்டு வந்தனர்.

மேலும், இந்த வசந்த கால ஆரம்ப நிகழ்வுகளில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் சீ.பி.இரட்நாயக்க மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என வசந்த கால அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த பொழுதும் எந்த ஒரு அமைச்சரும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.