மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

-மன்னார் நிருபர்-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை  மதியம் ஒரு மணி நேரம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை  மதியம் 12 மணி முதல் 1 மணி வரை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

13 சுகாதார தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நாட்டில் இடம் பெற்று வருகின்ற அசம்பாவிதங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கையில் அமுல் படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், மக்களின் உரிமைகளை கடுத்துப்படுத்தவதை நிறுத்தக் கோரியும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும், மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும், சுகாதார சேவைக்கு அத்தியாவசிய தேவைகளை உடனடியாக வழங்க கோரியும், மக்களின் உயிரை பாதுகாக்க கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.