மட்டு.கோட்டைக்கல்லாறு பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கோட்டைக்கலாறு 1 பகுதியில் வீடு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் காப்புறுதி நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதாக தெரிய வருகின்றது.

உயிரிழந்த பெண்ணின் மகன் தனது தாயாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது பல முறை அழைத்தும் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காததால் தாயை தேடி வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயார் உயிரிழந்து இருப்பதை அவதானித்த அவர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.