மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தற்கொலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மட்டக்களப்பு கல்லடி பாலம் பிரதான வீதியில் ஜீவி வைத்தியசாலைக்கு எதிராக உள்ள காப்புறுதி நிறுவனத்தின் முன்பாக உள்ள கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்றை சேர்ந்த 22 வயது இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி வைத்தியசாலை உள் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு 700 மணியளவில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்

மேலும் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

குறித்த நபர் கடந்த 3 மாதங்களாக ஒரு தொழிலும் இல்லாது இருந்துள்ளார்.

இந்நிலையில் மது அருந்துவதற்கு மனைவியிடம் ஆயிரம் ரூபா பணம் கேட்டுள்ளார் ஆனால் குழந்தைக்கு பால்மா வாங்க 200 ரூபா மட்டும் இருப்பதாக மனைவி தெரிவித்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று குறித்த இளம் குடும்பஸ்தர் 3 முறை கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் மனைவி குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் தனது தாயாரிடம் தான் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்து விட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவ இடங்களுக்கும் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலங்களை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

நேற்று வியாழக்கிழமை முதலாம் திகதி இரவு 7 மணியில் இருந்து இன்று அதிகாலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கினறனர்.