
நுவரெலியாவில், இன்று சனிக்கிழமை சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது.
இதில் அதிகமாக பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து படர்ந்து காணப்பட்டது .
நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிந்து காணப்படுகின்றன.
இதனால் தாவரவியல் பூங்கா புல்வெளிகள் ,கிரகரி வாவிக் கரையோரம், பூந் தோட்டங்கள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் உள்ளிட்ட நீண்ட மரக்கறி தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மீது படர்ந்த ஐஸ் துகள்களின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
இதனால் சுற்றுச்சூழல் முழுவதும், கண்களையும் வசீகரப்படுத்தும் அளவில் வெள்ளை நிறத்தில் காண முடிந்தது.
அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பனிபொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது
இதேவேளை காலை முதல் மாலை வரை கடும் உஷ்ணமான காலநிலையுடன் வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிரும் நிலவி வருகிறது
மேலும், கடும் குளிர் 9.8 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் துகள் உறைபனி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
